தமிழின அழிப்பு கல்வி வார தொடக்கத்தில் தமிழின அழிப்பு நினைவு சின்னம் Brampton நகரில் திறந்து வைக்கப்படும் நிகழ்வு புலம் பெயர் தமிழர்கள் மட்டுமல்ல உலகில் அறமும் நீதியும் வேண்டும் அனைவரும் நன்றியுடன் வரவேற்கின்றனர்.ஒட்டாவா தமிழ் ஒன்றியம் (OTA) சார்பில் Brampton நகரபிதா கௌரவ Patrick Brown, Brampton City Councillors, கனேடிய தமிழர் தேசிய அவை (NCCT) மற்றும் இந்த வரலாற்று முக்கியமான நினைவு தூபி அமைய உதவிய அனைவருக்கும் நன்றிகள். இந்த தூபி அமைப்புக்கு ஒட்டாவா தமிழ் ஒன்றியம் $500 இற்று மேற்பட்ட நிதிப்பங்களிப்பையும் முழுமையான ஆதரவையும் வழங்குகிறது.
இவ்வருடம் கனடா அரசால் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது தமிழின அழிப்பு நினைவு நாள் ஆகும். 2021 இல் ஒன்றாரியோ அரசின் தமிழின அழிப்பு கல்வி வாரம் சட்டமானதும், 2022 இல் கனடா பாராளுமன்றில் தமிழின அழிப்பு நினைவு நாள் மற்றும் சிறிலங்காவின் தமிழின அழிப்பு அங்கீகரிக்கும் பிரேரணை ஏக மனதாக நிறைவேற்ற படடமையும், 2023 இல் கனேடிய பிரதமரால் பிரகடன படுத்தப்பட்டமையும் குறிப்பிட தக்கது.. பதினாறு வருடங்கள் கடந்த போதும் தமிழின அழிப்புக்கான சர்வதேச நீதி இன்றும் தமிழீழ தமிழர்களுக்கு ஒரு மறுக்கப்பட்ட நீதியாகவே இருக்கிறது. உலகில் ஒரு இன அழிப்புக்கு தண்டனை வழங்காது விட்டால் அது இன்னுமொரு இன அழிப்புக்கு வழிகோலும் என்பதே வரலாறு.
சிறிலங்கா அரசால் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பில் பாதிக்கப்பட்டவர்களையும், உயிர் பிழைத்தவர்களையும் நினைவு கூர்ந்து, நீதிக்கான போராட்டத்தை உறுதிப்படுத்தும் இந்த நினைவு தூபி, தமிழ் மக்களின் உறுதியையும் ஒற்றுமையையும் பறைசாற்றுகிறது. இந்த நினைவு தூபி, தமிழ் மக்களின் துயரங்களை உலகிற்கு எடுத்துரைப்பதோடு, சர்வதேச அளவில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதற்கு ஒரு சக்திவாய்ந்த சின்னமாக விளங்கும். இதன் மூலம், தமிழின அழிப்புக்கு நீதி கிடைக்கும் வரை தமிழர்களின் பயணம் தொடரும்.
தமிழீழ வரைபடத்தை இருகைகளால் தாங்கி நிற்கும் இந்த நினைவு தூபி ஈழ தமிழர்களின் பூர்வீக தேசத்தில் அவர்களின் சுயநிர்ணய உரிமையையும் தமிழர்களின் இறைமையையும் உலக வல்லாதிக்க சக்திகள் மறுக்க முடியாது என்பதையும் கூறி நிற்கிறது. இது போன்ற தமிழின அழிப்பு நினைவு தூபிகள் உலகில் அனைத்து நகரங்களிலும் உருவாக்கப்பட வேண்டும்.
ஒட்டாவா தமிழ் ஒன்றியம் info@ottawatamilassociation.ca |ottawatamilassociation.ca
###